கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் அம்பானியை தவிர மற்ற அனைவரும் உலகின் டாப் 100 பணக்காரர்களில் பட்டியலில் இருந்து வெளியேறினர்.
கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுத்தப்பட்டு, உற்பத்திகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனையும் இல்லாததால் பெரும் பொருட்சேதம் மற்றும் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன.
இதன் எதிரொலி உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வளர்ந்த நாடுகளே பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்திய பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்திய பங்கு சந்தைகள் பரிதாப நிலையில் உள்ளன. இதற்கிடையே இந்தியாவை சேர்ந்த உட்பட்ச பணக்காரர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவிலேயே பணக்காரரான தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த இரண்டு மாதங்களில் தனது சொத்து மதிப்பில் 28% சரிவை சந்தித்துள்ளார். நாள் ஒன்று சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் அந்நிறுவனத்திற்கு சுமார் 48 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
அத்துடன் இந்த பெரும் வீழ்ச்சியால் அந்நிறுவனத்தின் பொருளாதார நிலை 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சரிந்துள்ளதாகவும், இதனால் உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த அம்பானி 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுதவிர உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியில் இருந்த அதானி 6 பில்லியன் அல்லது 37% இழப்பை சந்தித்து பட்டியலில் இருந்தே வெளியேறியுள்ளார். மேலும், ஹெச்.சி.எல் நிறுவனம் (5 பில்லியன் நஷ்டம்) மற்றும் உதய் கொடாக் (4 பில்லியன் நஷ்டம்) நிறுவனம் ஆகியவையும் 100 பேர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.