நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். 48 வயதான அவர் எல்லை பாதுகாப்புப் படையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அவர் கடைசியாக பெங்களூருவில் பணி புரிந்து வந்தார். 

தூக்கிச் செல்லப்பட்ட உதயகுமாரின் உடல்

அலுவலகத்தில் அவர் இரவுப் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலியால் துடித்த அவரை உடன் பணியாற்றியவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உதயகுமார் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல், சொந்த ஊரான பணகுடிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். 

இறுதி அஞ்சலி

அதன் பின்னர் பணகுடியில் உள்ள மயானத்துக்கு அவரது உடலை அடக்கம் செய்வதற்காக காவல்துறை ஆய்வாளர் சாகுல்ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ பிரதீப் மற்றும் போலீஸார்  சுமந்து சென்றனர். இறுதிச் சடங்கில் எல்லை பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றனர். உதயகுமாரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்பு  உதயகுமாரின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த உதயகுமாருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்ய லட்சுமி என்ற மகளும் முத்தையா முரளிதரன் என்ற மகனும் உள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.