உலகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இந்தியாவிலும் வலுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3,671 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 99 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு ஒன்பது நிமிடங்கள் விளக்கு, மெழுகுவத்தி ஏற்றுவது அல்லது மொபைல் டார்ச் லைட் ஒளிரச் செய்ய வேண்டும் எனப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு சமயத்தில் மக்களை உற்சாகப்படுத்த, ஒற்றுமையை வலியுறுத்த இதுபோன்ற செயல்கள் செய்வது நல்லது என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொருபுறம் இதைக் கிண்டலடித்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான மனோதங்கராஜ் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்கள் மனோ அண்ணனின் வேண்டுகோள் எனத் தொடங்கும் அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, “குமரி மேற்கு மாவட்ட கழகத் தோழர்களே, நீங்கள் ஒவ்வொருவரும் இன்று (5.4.2020) மாலை 4 முதல் 6 மணிவரை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் எனக் குறைந்தது பத்து பேரையாவது மொபைல் போனில் தொடர்புகொள்ளுங்கள்.
அவர்களிடம் கனிவாக நலம் விசாரியுங்கள். தூய்மையான சுகாதாரத்தையும், சமூக விலகலையும் கட்டாயமாக கடைப்பிடிக்கக் கூறுங்கள். கொரோனாவை ஒழிக்க வீட்டிலேயே தனித்திருக்கவும், விழித்திருக்கவும் வலியுறுத்துங்கள். கொரோனா நோய்க்கு எதிரான நமது போராட்டத்தில் இன்றைய விளக்கு கொளுத்தும் நிகழ்வு அறிவியல்பூர்வமாக எவ்வித தீர்வையும் ஏற்படுத்த உதவாது என்பதையும், மீண்டும் நம் சமூகம் மூட நம்பிக்கைகளுக்குள் சிக்கிவிடக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.
இந்தக் கருத்துகளை அவர்களது பத்து நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக்கூறச் சொல்லுங்கள். அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் இதைச் செய்ய அன்பாய் கேட்டுக்கொள்ளுங்கள்” என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து தி.மு.க. எம்.எல்.ஏ. மனோதங்கராஜிடம் பேசினோம், “இக்கட்டான சூழ்நிலையில் மக்களை அவர்கள் கொள்கை சார்ந்த விஷயங்களுக்கு பிரதமர் இழுத்துச் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் இதை செயல்படுத்துகிறோம்” என்றார்.