2ஆம் உலகப் போருக்கு பின்னர் முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கியுள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவால் வீழ்ந்துள்ளன. மக்கள் கூடுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நாடுகளில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் தொடர்கள், கால்பந்து தொடர்கள், டென்னிஸ் தொடர்கள் என அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் வரும் ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 11ஆம் தேதி வரை விம்பிள்டன் தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸால் ரத்து செய்யப்படுவதாக அனைத்து இங்கிலாந்து கிளப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், விம்பிள்டன் தொடரில் பங்கேற்கும் மக்கள் உட்பட அனைவரது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தான் நமக்கு முதன்மையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரிட்டனில் நடைபெறும் இந்த தொடரில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து டென்னிஸ் வீரர்கள், விருந்தினர்கள், உறுப்பினர்கள், பணியாட்கள், தொண்டர்கள், பங்குதாரர்கள், ஒப்பந்ததாரர்கள், உள்ளூர் வாசிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
எனவே உலகிற்கே சவால் வந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கும் பெரும் பொறுப்புண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் விம்பிள்டன் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தற்போது தான் விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.