கேரள மாநிலத்திலும் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநில தொழிலாளர்கள் உள்ளனர். முகாம்கள் அமைத்து அவர்கள் தங்க வைக்கப்படுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 1,059 கம்யூனிட்டி கிச்சன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் பாயிப்பாடு பகுதியில் கடந்த 29-ம் தேதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் திடீரென சாலையில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்.
`தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை, நாங்கள் சாப்பிடும் வகையான உணவு வழங்கவில்லை. எங்கள் ஊருக்கு எங்களை அனுப்பி வைக்க வேண்டும்’ எனக் கூறி அவர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பெரும்பாவூர் பகுதியிலும், வேறு சில இடங்களிலும் வெளி மாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது கேரள அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியது.

வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பஸ் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகச் சிலர் பொய்யான தகவலைப் பரப்பியதே இந்தப் போராட்டத்துக்குக் காரணம் எனவும், சில தீவிர சிந்தனை கொண்ட அமைப்புகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வாட்ஸ் அப் மூலம் போராட்டத்துக்கு ஒன்றுகூட வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் லாக் டவுன் தடையை மீறி ஒன்று கூடி போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது ரிஞ்சு, அன்வர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இளைஞர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டதாகப் பட்டாம்பியைச் சேர்ந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சி.ஐ.டி.யு அமைப்பின் டிவிசன் செயலாளர் ஷக்கீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெல்ஃபர் பார்ட்டியைச் சேர்ந்த நசருதீன் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “கேரளம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்னேறுவது பிடிக்காத சிலர், தொழிலாளர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அவர்களுக்கான கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் போராட்டம் கூட்டுசேர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. போலீஸ் நடவடிக்கை தொடரும்” என்றார்.