உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்களும் ஆங்காங்கே கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சம்பவங்கள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
டெல்லியில் அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டதுடன் மருத்துவர்கள் அறை, பரிசோதனை நிலையம் முதலிய மருத்துவமனை வளாகங்கள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில் இங்கிலாந்து சென்று வந்த தன் சகோதரரை மருத்துவர் நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாக, சகோதரரான இந்த மருத்துவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மருத்துவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்களை டிராக் செய்யும் பணியில் இறங்கியுள்ளார்கள். மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்களை டிராக் செய்யும் பணி சவாலானதாக இருப்பதாகவும், எனினும் தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. முன்னதாக டெல்லியில் உள்ள ஒரு கிளினிக்கில் பணியாற்றிய இரு மருத்துவர்களுக்கு கொரோனா இருப்பது ஒரே வாரத்தில் உறுதி செய்யப்பட்டது. சவுதியிலிருந்து டெல்லி திரும்பிய பெண்மணி ஒருவர் அந்த இரு மருத்துவர்களில் ஒருவரை அவர்களது மருத்துவமனையில் சந்தித்து இருக்கிறார். அதன் மூலம் கொரோனா அந்த இரு மருத்துவர்களுக்கும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
Also Read: `நோ’ மாஸ்க்; வார்த்தையே உச்சரிக்கக் கூடாது! – சர்ச்சையில் துர்க்மெனிஸ்தானின் `கொரோனா’ உத்தரவு
மேலும், பாபர்பூர் சமூக கிளினிக்கில் ஒரு மருத்துவருக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆக உள்ளது.