கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா காரணமாக முகக் கவசங்கள். கைகளைக் கழுவ பயன்படுத்தப்படும் சானிடைசர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அதனால் முகக்கவசங்கள், சானிடைசர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதைப் பயன்படுத்தி தரமற்ற முகக்கவசங்கள், சானிடைசர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதோடு கூடுதல் விலைக்கும் அவை விற்கப்படுகின்றன.
Also Read: ’70 ஆயிரம் மாஸ்க்; 16 குழுக்கள்’ -மாஸ் காட்டும் தேனி மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
தன் கையே தனக்கு உதவி என்பதற்கு ஏற்ப முகக்கவசங்கள், சானிடைசர்கள் தயாரிப்பில் சென்னைக் காவல்துறை களமிறங்கியுள்ளது. சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் தையல் தெரிந்த பெண்காவலர்கள், வேதியியல் படித்த ஆண் காவலர்கள் மூலம் இந்தப் பணிகள் நடந்துவருகின்றன. சென்னை காவல்துறையினர் வீடுகளிலிருந்து தையல் இயந்திரங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டன. தையல் படித்த பெண் காவலர்கள் மூலம் முகக்கவசங்களைத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இதைப்போல வேதியியல் படித்த ஆண் காவலர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியதன்படி மருந்தியில் துறை டாக்டர்கள் சானிடைசர்களைத் தயாரிக்கும் பயிற்சியை அளித்தனர். இதற்காக, புதுப்பேட்டை ஆயுதப்படை அலுவலகத்தில் தற்காலிக ஆய்வகம் செயல்பட்டுவருகிறது. சானிடைசர்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்மூலம் 1,000 லிட்டர் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
Also Read: `மாஸ்க்கை நான் தருகிறேன்; அணிந்தால் மட்டும் போதும்!’ – கலக்கும் கன்னியாகுமரி காவலர்
இதுகுறித்து புதுப்பேட்டை ஆயுதப்படை போலீஸார் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்காகக் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான முகக்கவசங்கள், சானிடைஸர்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருந்தது. அதனால்தான் தரமான முகக் கவசங்களையும் சானிடக்சர்களையும் காவல்துறை சார்பில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப் பணிக்காக சென்னை ஆயுதப்படை பிரிவில் தையல் தெரிந்த 30 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் மூலம் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. முகக் கவசங்களைத் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களான நான் ஊவன் பேப்ரிக் மற்றும் மெல்போன் பேப்ரிக் ஆகியவற்றை சென்னைக் காவல்துறை கொள்முதல் செய்தது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப் பொருள்களைக் கொண்டு 60,000 முகக் கவசங்களைத் தயாரிக்க முடியும். ஒரு முகக் கவசத்தைத் தயாரிக்க 1.50 ரூபாய்தான் செலவாகிறது.
Also Read: `லத்தி தேவையில்லை, அனைவருக்கும் அட்வான்ஸ் தருகிறேன்!’- போலீஸ் ஏ.சி-யின் நூதன தண்டனை #Corona
தினமும் 3,000 மூன்றடுக்கு முகக் கவசங்கள் தயாரித்து வருகிறோம். இந்தக் கவசங்கள் காவல்துறையினருக்கு மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம். முகக் கவசங்களைத் தொடர்ந்து சானிடைசர்களும் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக ஆயுதப்படையில் வேதியியல் படித்த ஆண் காவலர்களுக்கு மருந்தியல் துறையைச் சேர்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 1,000 லிட்டர் சானிடைஸர்கள் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்குத் தினமும் 100 மி.லி சானிடைஸர்கள் கொடுக்கப்படுகின்றன” என்றனர்.
லத்திகளைப் பிடித்த பெண் காவலர்களும் ஆண் காவலர்களும் முகக் கவசங்கள், சானிடைசர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னைக் காவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.