முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது குறித்த வழிமுறையை மத்திய அரசின் அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம் வகித்து வருகிறது. இதனிடையே சானிடைசர், முகக் கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களின் விலை அதிகமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கவனத்தில் கொண்டு அரசு மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பவர்களின் கடைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், முகக் கவசங்களை வீட்டிலேயே தயாரிப்பது குறித்த வழிமுறையை மத்திய அரசின் அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இரண்டு அடுக்கு கொண்ட பருத்தி துணியினால் ஆன முகக் கவசங்களை தயாரிப்பது தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், தயாரிக்கப்படும் முகக் கவசங்களை மீண்டும் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த முகக் கவசங்களை உப்பு கலந்த வெந்நீரில் துவைத்து, பின்னர் ஐந்து மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முகக் கவசங்கள் மூலம், கொரோனா வைரஸை விட மிக குறைவான அளவு கொண்ட கிருமிகளும் உள்புகுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த முகக் கவசங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM