கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் ஆகியோர் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைக் காக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலர் வீடுகளில் முடங்கியிருக்காமல் சாலையில் உலா வருகின்றனர். காவல்துறையினர் அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வீட்டுக்கு அனுப்புகின்றனர்.
அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவரின் மகள் கையில் பதாகைகளுடன் இருக்கும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தச் சிறுமி உணர்ச்சிமிக்க மற்றும் சக்திவாய்ந்த செய்தியைக் கூறுவதாக அவர் பதிவிட்டுள்ளார். சிறுமியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுமி தன் கையில் வைத்திருக்கும் பதாகையில், `என் தந்தை ஒரு போலீஸ்காரர். உங்களுக்கு உதவுவதற்காக அவர் எங்களிடம் இருந்து விலகியிருக்கிறார். தயவுசெய்து நீங்கள் அனைவரும் வீட்டிலிருந்து அவருக்கு உதவுங்களேன்?” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைப் பதிவிட்டுள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அருணாசலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மகள் உணர்ச்சிமிக்க மற்றும் சக்திவாய்ந்த செய்தியைக் கூறியுள்ளார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் விதமாக பணிசெய்யும் காவல்துறையினரை பாராட்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.