‘கொரோனா வைரஸ்’ திரும்பிய இடமெல்லாம் இந்தப் பெயர்தான் உச்சரிக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்பு, வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் எனக் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களைக் கேட்க முடிகிறது. இந்த வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. சமூக விலகல் ஒன்றே இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்பதால் இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா

இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவதிப்படக் கூடாது என்பதால் பல்வேறு நிதியுதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற ஒற்றை வேண்டுகோளைத்தான் அரசு முன்வைக்கிறது. சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர். மக்களின் அவசரத் தேவைக்காக சில உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. கொரோனாவின் விபரீதம் புரியாமல் சிலர் செய்யும் சேட்டைகள் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் அரசு அதிகாரிகளிடம் அத்துமீறிய இளைஞர் ஒருவருக்கு மாவட்ட ஆட்சியர் உகந்த படிப்பினை அளித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு இளைஞர் ஒருவர் போன் செய்து தனக்கு நான்கு சமோசா வேண்டும் அதிகாரிகளை வாங்கி வரச் சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார்.

சமோசா

இளைஞரின் இந்த நடவடிக்கையால் கடுப்பான அதிகாரிகள் அவருக்குப் பல்வேறு எச்சரிக்கைகள் கொடுத்துள்ளனர். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தனக்கு சமோசா வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

Also Read: `உடைந்த கால்களுடன் 240 கி.மீ நடைப்பயணம்!’ – ஊரடங்கு உத்தரவால் கலங்கும் ராஜஸ்தான் இளைஞர்

மாவட்ட ஆட்சியர் நான்கு சமோசாவை ஆர்டர் செய்து அந்த இளைஞரின் முகவரிக்குக் கொண்டு சென்று கொடுத்துவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதோடு விட்டுவிடவில்லை. சூழல் புரியாமல் அத்துமீறிய இளைஞருக்குப் பாடம் புகட்டும் விதமாகக் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இந்தப் புகைப்படத்தைப் பதிவிட்ட மாவட்ட ஆட்சியர் அந்த இளைஞர் செய்ததை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம்

மேலும், “ இந்த தேசியப் பேரிடர் காலத்தில் உங்களாலும் ஆதரிக்க முடியும். பொறுப்புள்ள குடிமகனாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. ஆரோக்கியமாக இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த நடவடிக்கையை சமூகவலைதளத்தில் பலர் பாராட்டியுள்ளனர். இந்த இளைஞர் மட்டுமல்ல கடந்த சில நாள்களாக ப்ராங் கால் செய்த பலருக்கு இந்த ட்ரீட்மென்ட் அளித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.