தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, 74’ல் இருந்து 124 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 50 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ற தகவலை சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களைத் தேடும் பணியில் தமிழக சுகாதாரத்துறை தீவிரம்காட்டிவந்தனர். அதன் ஒருபகுதியாக, தேனியைச் சேர்ந்த 21 பேர் இன்று கண்டுபிடிக்கப்பட்டனர்.
Also Read: ”வாங்குன கடனுக்கு வட்டி கட்ட வேண்டாமா?!” -விலை குறைவால் வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்
டெல்லி நிஜாமுதீன் என்ற பகுதியில், நடைபெற்ற ‘All India TamilNadu Masura’ என்ற நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,131 பேர் கலந்துகொண்டது தெரியவந்தது. இவர்களில் 515 பேர் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 21 பேர் தேனியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இன்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த 21 பேரையும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துவரும் முயற்சியில் மாவட்ட சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர். அதன் விளைவாக, அனைவரும் கானாவிலக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவர், “அழைத்துவரப்பட்ட யாருக்கும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இல்லை. ஆனால், அனைவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிலர், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுவர்” என்றார்.
Also Read: ’70 ஆயிரம் மாஸ்க்; 16 குழுக்கள்’ -மாஸ் காட்டும் தேனி மகளிர் சுய உதவிக் குழுக்கள்!
டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தாமாக முன்வந்து தங்களைப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.