கொரானா பாதிப்பை தவிர்க்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை போட்டுள்ளது. மேலும் அதற்கு முன்பாகவே தமிழக அரசு 144 தடை உத்தரவை அறிவித்திருந்தது. இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் உள்ள போதும் பால், மருந்து, மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கவும், வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்றுக் கூறி காவல்துறை சில இடங்களில் கடுமையாக நடந்துகொள்வதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக உயர்நீதிமன்ற வரலாற்றிலே முதன்முறையாக இந்த வழக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மாநில அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியார் வாட்ஸ் அப்பில் காணொளி வழியே இணைந்திருக்க வாத பிரதிவாதம் நடைபெற்றது.
அரசு தரப்பில் எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை எனவும், இதுவரை ஊரடங்கை மீறியதாக 17,118 வழக்குகள் பதியபட்டுள்ளதாகவும் முறையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட எந்த உத்தரவையம் பிறப்பிக்காமல், மனித உணர்வு மதிக்கப்பட வேண்டும் என அறிவுறித்தினர். மேலும் நடுநிலையான அணுகுமுறையை கையாளவேண்டும் எனக் காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.
மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்ககூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தினர். ஆனாலும் ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்து, எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் வழக்கை முடித்து வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM