கிரெடிட் கார்டுகளுக்கும் மாதாந்திர தவணை கட்ட வேண்டாம் என ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களின் பாரத்தை குறைக்கும் வகையில் கடனுக்கான மாதாந்திர தவணைகளுக்கான சலுகைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி நிறுவன வங்கிகள் மற்றும் உள்ளூர் வங்கிகள், கிராமப்புற வங்கிகள், அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட அனைத்துமே கடன் பெற்றவர்களிடம் மார்ச் 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரைக்கான மாதத் தவணை வசூலிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
இந்த மாதாந்திர தவணை விலக்கு கிரெட்டி கார்டுகளுக்கு பொருந்துமா ? என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதற்கும் அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அசல் மற்றும் வட்டியுடன் கூடிய கடன், ஒரே தவணையாக செலுத்தும் புல்லட் கடன், மாதாந்திர தவணை மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான தவணை இவை அனைத்துக்கும் ஆர்.பி.ஐ உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.