இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விடவும் குறைவாக உள்ளதாகவும், தற்போது போடப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு தடைதான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறியுள்ள மூடிஸ் அமைப்பு, முன்னதாக இந்தியாவின் நடப்பாண்டிற்கான ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை 5.3 சதவிகிதமாகக் கணித்திருந்தது. ஆனால் அந்த வளர்ச்சி விகிதம் கொரோனா பாதிப்பால் தற்போது 2.5 சதவிகிதமாக குறையும் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றின் பாதிப்பிலிருந்து இந்தியா மீண்டு வர இன்னும் சில மாதங்கள் ஆகும், என்றாலும் வரும் நிதியாண்டில் (2021) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, இந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்திருந்தது.
Also Read: `2020-ல் உள்நாட்டு உற்பத்தி 6.7-லிருந்து 5.8 சதவிகிதமாகக் குறையும்’ – மூடிஸ் கணிப்பு!
கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள இந்த சர்வதேசப் பொருளாதாரப் புலனாய்வு அமைப்பு, ‘கோவிட் – 19’ நோய்த் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய சரிவைச் சந்தித்திருக்கிறது. இதனால், வளரும் நாடுகள் முதல் வளர்ந்த நாடுகள்வரை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகப் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு 2.6% வரை வளர்ச்சியடையும் என்று கூறியிருந்தது. ஆனால், தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக, அந்த 2.6 சதவிகிதத்தில் இந்த நிதியாண்டில் 0.5 சதவிகிதம் குறையும் என்றும், அடுத்த நிதியாண்டில் 3.2% ஆக அதிகரிக்கலாம் என்றும் மூடிஸ் கணித்துள்ளது.
மேலும் வளரும் மற்றும் வளர்ந்த 20 நாடுகளைக் கொண்டு 2020-ம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்படும் நிகர உள்நாட்டு உற்பத்தி விகிதத்தைக் கணித்து பட்டியல் ஒன்றினையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட 20 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை, ‘கொரோனாவிற்கு முன்’ ‘கொரோனாவிற்குப் பின்’ என்ற அடிப்படையில் வளர்ச்சி விகிதத்தைக் குறிப்பிட்டுள்ளது.
2019-ம் ஆண்டின் இறுதியில் உலக நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சியைக் கணித்திருந்த அந்த அமைப்பு தற்போது, கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு நாடுகளும் அடையக் கூடிய தனிப்பட்ட வளர்ச்சி விகிதத்தை மதிப்பீடு செய்து பட்டியலிட்டிருக்கிறது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக இருந்தாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா நல்ல வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அதன் வளர்ச்சி விகிதம் மற்ற நாடுகளின் வளர்ச்சி விகிதத்தை விடவும் அதிகமாகவே உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாகச் சீனா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் அதிகபட்ச வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளின் வளர்ச்சி அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளதையும் அந்த அமைப்பு பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறது.