கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒருநாளில் 23 சதவிகிதம் அளவுக்குப் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
நியூயார்க்கில் 54 ஆயிரம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், சுமார் 900 பேர் உயிரிழந்துள்ளனர். தூங்கா நகரமான நியூயார்க்கின் வீதிகள் மயான அமைதியோடு காட்சியளிக்கின்றன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்கள். பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ் மற்றும் கனெக்ட்டிகட்டை தனிமைப்படுத்தப் போவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
இதனால் மக்களின் அச்சம் அதிகரிக்கும் என்று நியூயார்க் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 8 மணிநேரத்திற்குப் பிறகுத் தனது முடிவை ட்ரம்ப் திரும்பப் பெற்றுள்ளார். நியூயார்க் ஐ தனிமைப்படுத்துவது அவசியம் அல்ல என்று அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.