கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66. இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், அவர் நேற்று திடீரென உயிரிழந்தார். மேலும் முட்டம் பகுதியை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் திருவட்டர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் 24 ஆகியோரும் நேற்று உயிரிழந்தனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று விளக்கம் அளித்துள்ள சுகாதாரத்துறை, உயிரிழந்த மூவரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. பரிசோதனையின் முடிவில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
“ ஊரடங்கிற்காக என்னை மன்னித்து விடுங்கள்; வேறு வழியில்லை”- பிரதமர் மோடி