பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு்ள்ளது. அவர்கள் யார் யார்?
கொரோனா வைரஸ் எல்லைகள் தாண்டி நாள்தோறும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் சாமானியன், பிரபலம், அதிகாரம் பலம் மிக்க நபர் என்ற வித்தியாசமின்றி நோய் தொற்று ஏற்படுகிறது. அந்த வகையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனரோவின் பத்திரிகை பிரிவு செயலாளர் ஃபபியோ வஜ்கார்டனுக்கு மார்ச் 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோய்ரெவுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, இருவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பிரான்ஸின் கலாசாரத்துறை அமைச்சர் பிராங்க் ரெய்ஸ்டெர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பிரான்சில் கொரோனா பாதித்த முதல் அமைச்சர் இவர்தான். ஈரானை பொருத்தவரை நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் துணை அதிபர் ஈஷாக் ஜஹாங்கிரி உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோவின் மனைவி பெகோனா கோமெஸூக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும், அவரைத் தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
முன்னதாக பிரிட்டன் இளவரசர் சார்லஸூக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் அமெரிக்க செனட் உறுப்பினர் ரேன்ட் பால் உள்ளிட்ட பலருக்கும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க புதிய மொபைல் ஆப்: திருவள்ளூர் எஸ்பியின் புது ஐடியா