உலகெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ந்த நாடுகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. சனிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 889 பேர் இறந்ததாகவும், இதனால் இறப்பு எண்ணிக்கை 10,023 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர 92,472 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இதில் இத்தாலிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தாலி நிலவரம் கவலை தரும் வகையில் உள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஆறுதல் தரும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு கொரோனா கட்டுக்குள் வரும் சூழல் மெல்லமெல்ல உருவாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா உயிரிழப்புகள் ஒரு அளவுக்கு மேல் அதிகரிக்காது என்பது உறுதியாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல குறையத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்பெயினில் கொரோனாவுக்கு 5,690 பேர் இறந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயினில்தான் அதிகம் பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் 319 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள நிலையில் இனிமேல்தான் தங்கள் உண்மையான போராட்டம் ஆரம்பம் என அந்நாட்டு பிரதமர் எடுவார்டு பிலிப் தெரிவித்துள்ளார்.