இன்று புதியதாக மூன்று கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப் பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.
சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 597,607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 133,377 பேர் குணமடைந்துள்ள நிலையில் 27,371 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906ஆக உள்ளது. அதில் 83பேர் குணமடைந்துள்ள நிலையில் 804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 38 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் இப்போது வரை மதுரையைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 42 வயதான நபர், காட்பாடியைச் சேர்ந்த 49 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர், “இன்று கொரோனா நோயினால் பாதிப்புக்கு உள்ளான மூன்று புதிய நோயாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். தஞ்சை, மதுரை ஆகிய ஊர்களைச் சேர்ந்தவருக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1500 ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில், 41 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
மேலும் 10 மாவட்டங்களில் தற்போது பாதிப்பு உள்ளாகி இருக்கும் நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளை அந்த 10 மாவட்டங்களில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். மருத்துவமனை கட்டமைப்புகளை அதிகரித்துக் கொண்டே வருகிறோம். தற்போது தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17,000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அதற்கான தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு தயாராக உள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. மூன்றாம் நிலைக்குச் செல்லாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.