கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் மட்டுமல்லாமல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் கூடுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் நடத்துவதில் பிசிசிஐ மற்றும் மத்திய அரசுகளுக்கிடையே இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. முன்னதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை குறைத்து நடத்தப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறியிருந்தார்.மேலும் இந்த ஆண்டு ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் ஐபிஎல் குறித்து பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ” ஏப்ரல் 15-ம் தேதிக்குப் பிறகு நிலைமைக்கு ஏற்ப புதிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் கொண்டு வரும். ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைபோல பார்க்கிறது. ஆனால், நாம் இப்போது விளையாட்டை மட்டும் பார்க்கவில்லை குடிமக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை அமலில் இருக்க உள்ளது. அதற்கு பிறகு கொரோனாவின் தீவிரம் குறைந்து மீண்டும் பழைய நிலைக்கு இந்தியா திரும்பினால்தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் வெளிநாட்டு வீரர்களும் வருகை தர வேண்டும். அப்படியென்றால் கொரோனாவின் தாக்கம் உலகளவில் அடங்கி சகஜ நிலைக்கு திரும்பினால் தான் வழக்கமான ஐபிஎல் நடக்கும் என்கின்றனர் விளையாட்டு விமர்சகர்கள்.
ஜப்பானிலுள்ள டோக்கியோவில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள்கூட அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளே ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை அவ்வளவு அவசரமாக நடத்துவார்களா? அப்படி நடத்த வேண்டிய அவசியம் தான் என்ன என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பேச்சைக் கேட்காவிட்டால் கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும் – சந்திரசேகர ராவ் எச்சரிக்கை