பால் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவை வழங்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் அனைவரும் பெரும்பாலும் வீட்டிலேயே முடங்கிப் போய் உள்ளனர். பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பால் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் முறையாகப் பால் வழங்கப்படுவதில் சிக்கல் நீடிப்பதாகப் பலர் புகார் கூறியுள்ளனர். பிள்ளைகளுக்கு முறையாகப் பால் கொடுக்கவில்லை என்றால் அவர்களுக்கான ஊட்டச்சத்தில் குறைபாடுகள் நேரிடலாம்.
“பால் என்பது கால்சியம் மற்றும் புரதச்சத்தின் மூலப் பொருளாகும். பெரும்பாலும் குழந்தை ஆரோக்கியமான, சீரான உணவை உண்ணும் வரை, பால் உட்கொள்ளாமல் இருப்பது குறித்துப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை ”என்று டாக்டர் சஞ்சய் வஜீர் தெரிவித்துள்ளார். அதேபோல் ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமான பாலை கொடுப்பது நல்லது அல்ல என்கிறார் மற்றொரு மருத்துவர்.
“இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லிக்கு குறைவாகப் பால் கொடுக்க வேண்டும். அதை மீறி அதிகமாக உட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ”என்று குழந்தை மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே, பால் கொடுப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டால் டாக்டரின் பரிந்துரைத்தபடி, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய சில ஊட்டச்சத்து பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
புரதச் சத்து:
குழந்தையின் எடைக்குத் தக்க புரதச் சத்து கொடுக்க வேண்டும். அதன்படி ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் புரதச் சத்தை எடுத்துக் கொள்வது அவசியம். அதற்காக, குழந்தைகள் சோயா பீன்ஸ், பன்னீர் அல்லது முட்டை, சுண்டல் மற்றும் பயறு வகைகளைக் கொடுக்கலாம். அசைவ உணவு உண்பவர்கள் முழுமையாகச் சமைத்த இறைச்சியைத் தொடர்ந்து சாப்பிடலாம்.
கால்சியம்:
கால்சிய சத்து பால் அல்லாத பல ஆதார உணவுகளில் உள்ளன. உலர்ந்த அத்திப்பழங்கள், ப்ரோக்கோலி, ஆரஞ்சு மற்றும் பாதாம் எடுத்துக் கொள்ளலாம். கால்சியம் குறைபாடுள்ள குழந்தைகள் கூடுதல் மருந்துகளை எடுக்க வேண்டியிருக்கும்.
இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகள் பால் குடிக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு. ஆகவே தாய்ப்பால் தொடர முடிந்தால் நல்லது. இது குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் அதிகரிக்கும். குறிப்பாகச் சரியான உணவை எடுத்துக் கொள்ள முடியாத குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு சிறந்த வழியாகும்.